மேட்டூர் அணையிலிருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்படுவதால் தஞ்சாவூர் மாவட்டம் காவிரி, கொள்ளிடம் மற்றும் கிளை ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட செய்தி குறிப்பு:
கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் மற்றும் அதன் கிளை ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி நீர் பாயும் ஆறுகள், குளங்கள் மற்றும் நீர்நிலை பகுதிகளிலும், தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள அபாயகரமான இடங்களிலும் பொதுமக்கள் குளித்தல், நீச்சல் அடித்தல், மீன் பிடித்தல், தன் புகைப்படம் எடுத்தல் மற்றும் இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் மற்றும் நீர்நிலைகளில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால், நீர் நிலை அருகில் குழந்தைகள் விளையாடச் செல்லாமல் பெற்றோர் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களது கால்நடைகளை நீர்;நிலைகள் வழியாக அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். நீர்;நிலைகளில் உள்ள பள்ளங்களை முன்னதாகவே தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையோடு பயன்படுத்த வேண்டும். தண்ணீர் திறந்து விடப்படும் கன அடி அளவு குறித்த விவரங்களை அவ்வப்போது ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொள்ள வேண்டும். கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை செய்ய வருவாய்த் துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.