தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே அம்மாபேட்டையில் புத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆர். சுந்தர்ராஜ், சாந்தி தம்பதியரின் புதல்வர் எஸ். சஞ்சீவிக்கும், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர். சரவணன், பூரணவள்ளி தம்பதியரின் புதல்வி எஸ். நந்தினிக்கும் செந்தமிழ் திருமுறைப்படி திருமணம் நடந்தது.
இதையொட்டி திருமண மேடையில் சிவன்,சக்தியை பூரண கும்பங்களில் ஆவாகணம் செய்து அதற்குரிய தமிழ் மந்திரங்களை ஓதி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து அம்மாபேட்டை புத்தூரை சேர்ந்த தெய்வத் தமிழ் மன்ற ஓதுவார் கண்ணையன் குழுவினரின் திருமுறை மந்திர முழக்கத்துடன் பேராவூரணி சிவத்திரு பழ. தம்புலிங்கனார் தலைமையில் சுவாமிநாதன்,ரமேஷ் உள்ளிட்ட குழுவினர் தேவார,திருவாசகம்,திருப்புகழ்,பன்னிரு திருமுறை பாடல்களை இசைத்து செந்தமிழ் திருமுறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
இதுகுறித்து பேராசிரியர் பழ. தம்புலிங்கனார் கூறியது:
செந்தமிழ் திருமுறைப்படி நடத்தி வைக்கப்படும் திருமணங்களில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ் மந்திரங்கள் இருப்பதால் அவற்றுடன் அனைவரும் ஒன்றி விடுகின்றனர். ஒரு தெய்வீக பரவச நிலை அனைவரையும் ஆட்கொள்ளும். இதுபோன்ற திருமணங்கள் தொடர வேண்டும் என்றார்.
விழா ஏற்பாடுகளை அம்மாபேட்டை தெய்வ தமிழ் மன்ற நிர்வாகிகள் பொன்மணி, கண்ணன்,ராஜேந்திரன்,ராமநாதன்,நடராஜன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.