பழைய பேருந்து நிலைய கடைகள் முன் முள்வேலி அமைப்பு

பழைய பேருந்து நிலையம் அருகே கடைகள் முன் முள் வேலி அமைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

பழைய பேருந்து நிலையம் அருகே கடைகள் முன் முள் வேலி அமைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் தஞ்சை பழைய பஸ் நிலையம், திருவையாறு பஸ் நிலையங்கள் புதிதாகக் கட்டப்படுகின்றன. இதையடுத்து தஞ்சை பழைய பஸ் நிலையம், திருவையாறு பஸ் நிலையம் கரந்தை போக்குவரத்து கழக பணிமனை எதிரே உள்ள ரூ.60 லட்சத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக பஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. 
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு தஞ்சை பழைய பஸ் நிலையம் மற்றும் திருவையாறு பஸ்கள் நிற்கும் பேருந்து நிலையம் இரும்பு வேலிக் கம்பிகள் மூடப்பட்டன.
மேலும் அந்தப் பகுதியில் உள்ள கடைகளின் முன் இரும்பு வேலிக்கம்பிகள் அமைக்கப்பட்டன. இதனால் கடைக்குள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை கடையை திறக்க வந்த வியாபாரிகள் கடை முன் வேலி அமைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவலறிந்த வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவர் கணேசன், செயலர் முருகேசன், பொருளாளர் வாசுதேவன், தேநீர் கடை சங்கத் தலைவர் ஜெயபால், வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் பாண்டியன், வக்கீல் நல்லதுரை, தமிழக மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பஸ் நிலையம் பகுதியில் திரண்டனர். 
பின்னர் அவர்கள் இரும்பு வேலி அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
இதுகுறித்து வணிகர் சங்க பேரவை நிர்வாகிகள் கூறுகையில், பழைய பஸ் நிலையம் எந்த முன்அறிவிப்பும் இன்றி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதோடு, கடைகளின் முன்பு மாநகராட்சி அதிகாரிகள் இரும்பு வேலி அமைத்துள்ளனர். இதனால் கடைகளின் உரிமையாளர்கள் கூட உள்ளே செல்ல முடியவில்லை. கடையில் உள்ள பொருட்களை வெளியே எடுத்துச் செல்ல முடியவில்லை. பஸ் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் தவிப்பதோடு, எங்களின் வாழ்வாதாரத்தையே இழந்து நிற்கிறோம். 
பொலிவுறு நகரத் திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் பஸ் நிலையங்கள் இடமாற்றம் செய்வது குறித்து முன்கூட்டியே அறிவித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை. தீபாவளி முடியும் வரை கடைகள் பழைய பஸ் நிலையப் பகுதிலேயே தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பின்னர் எங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கித்தர வேண்டும். பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் முடிந்த பின்னர் இங்கு கடைகள் வைத்திருப்பவர்களுக்கே முன்னுரிமை அளித்து கடைகள் ஒதுக்கித்தர வேண்டும்.
மேலும் இரும்பு வேலியை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையென்றால் வணிகர் சங்க நிர்வாகிகள், பொதுமக்களைத் திரட்டி போராட்டங்களை நடத்த உள்ளோம். இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட சென்றால் புகார் வாங்க  யாரும் இல்லை என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com