ஓடும் ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்தல், அனுமதியின்றி வியாபாரம் செய்தல், பயணிகளுக்கு இடையூறு செய்தல், ரயிலுக்குள் புகை பிடித்தல், ஆபத்தான வகையில் செல்பி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்களில் சில பயணிகள் ஈடுபட்டு வருவதாக ரயில்வே நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதையடுத்து திருச்சி ரயில்வே மண்டல கமிஷனர் எம்.எப்.மொய்தீன் ஆணைப்படி , சனிக்கிழமை தஞ்சை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார் திருச்சி -காரைக்கால் உள்ளிட்ட தஞ்சை மாவட்டம் வழியாக செல்லும் பல்வேறு ரயில்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் ரயில்வே விதிமுறைகளை மீறிய 20 பேரை போலீஸார் பிடித்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து மொத்தம் ரூ. 5300 அபராதம் விதிக்கப்பட்டது.