தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பெண் ஊழியருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தனியார் துப்புரவு தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை பணிகளைப் புறக்கணித்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் துப்புரவு பணிகளை ஹைதராபாத்தை சார்ந்த தனியார் ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனத்தின் மூலம் 50-க்கும் அதிகமானோர் துப்புரவு பணி செய்து வருகின்றனர்.
இதில், ஒரு பெண் துப்புரவு தொழிலாளருக்கு அலுவலர் ஒருவர் சில வாரங்களாகப் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ரயில் நிலைய சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் புகார் செய்தனர்.
இதையடுத்து தொடர்புடைய அலுவலர் திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், இரு நாள்களாக அவர் மீண்டும் தஞ்சாவூருக்கு வந்து பணியாற்றுகிறார். மேலும், புகார் செய்த பெண்ணுக்கு வேலை இல்லை என கூறினாராம்.
இதனால், அதிருப்தியடைந்த ஊழியர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை பணியைப் புறக்கணித்துவிட்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர், சுகாதார ஆய்வாளர் அலுவலகம் முன் திரண்டனர். தொடர்புடைய அலுவலர் இங்கு தொடர்ந்து பணிபுரிந்தால் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்காது என்றும், எனவே அவர் இங்கு வேலை செய்யக்கூடாது எனவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாரும் நிகழ்விடத்துக்குச் சென்று ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். ஆனால் வேலைநிறுத்தம் தொடர்ந்தது. இதனால் ரயில் நிலையத்தில் துப்புரவு பணி பாதிக்கப்பட்டது.