தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள அணைக்கரை கீழணையிலிருந்து பாசனத்துக்காக புதன்கிழமை தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
காவிரி டெல்டா பாசன விவசாயத்துக்காக மேட்டூர் அணை ஆகஸ்ட் 13ஆம் தேதி திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கும்பகோணம் அருகே அணைக்கரையில் உள்ள கீழணைப் பாசனத்துக்காக புதன்கிழமை திறந்துவிடப்பட்டது.
கீழணையிலிருந்து விநாடிக்கு வடவாறு வாய்க்காலில் 1,800 கனஅடியும், வடக்கு ராஜன் வாய்க்காலில் 400 கனஅடி வீதமும், தெற்கு ராஜன் வாய்க்காலில் 400 கனஅடி வீதமும் என மொத்தம் 2,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அணையிலிருந்து தண்ணீரை தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் திறந்துவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் அரசுத் தலை மை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன், ஆட்சியர்கள் ஆ. அண்ணாதுரை (தஞ்சாவூர்), வெ. அன்புசெல்வன் (கடலூர்), சீ. சுரேஷ்குமார் (நாகை), ஜெயங்கொண்டம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ராமஜெயலிங்கம், முன்னாள் மக்களவை உறுப்பினர் ஆர்.கே. பாரதிமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கீழணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள 250 கன அடி தண்ணீரின் மூலம் தஞ்சாவூர் மாவட்டம் கீழ ராமன் வாய்க்கால், குமுக்கிமன்னியார் வாய்க்கால், மேல் ராமன் வாய்க்கால் மூலம் 9,000 ஏக்கர் விளைநிலங்கள் நேரடி பாசன வசதி பெறும் என பொதுப் பணித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
மேலும், கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களிலுள்ள விளைநிலங்களும் பாசன வசதி பெறும்.