பேராவூரணி அருகேயுள்ள பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் திருச்சி கிராமாலயா தொண்டு நிறுவனம் சார்பில் குடிநீர் வசதி மற்றும் கழிவறையை மறு நிர்மாணம் செய்வதற்கான தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
கஜா புயலால் பள்ளியில் குடிநீர் மற்றும் சுகாதார அமைப்புகள் சேதமடைந்தன. கிராமாலயா தொண்டு நிறுவனத்தினர் பாதிப்புகளை கணக்கெடுப்பு செய்து மும்பையைச் சேர்ந்த என்எஸ்இ பவுண்டேசன் நிறுவனத்தின் உதவியுடன் தஞ்சாவூர் மாவட்டத்தில் 18 அரசு பள்ளிகளிலும் , நாகப்பட்டினம் மாவட்டத்தில் 12 அரசுப் பள்ளிகளிலும் முதல் கட்டமாக 30 பள்ளிகளில் சுகாதார வசதிகளை புதுப்பித்து தர முடிவு செய்து, பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மறு புனரமைப்பு செய்வதற்கான பணிகள் புதன்கிழமை தொடங்கின.
இதற்கான நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கூத்தலிங்கம், துணைத் தலைவர் ஜெயபால், இணைச் செயலர் சாமிக்கண்ணு, பொருளாளர் நாகராசன், கிராமாலயா திட்ட ஒருங்கிணைப்பாளர் முரளிதரன், தொழில்நுட்ப அலுவலர்கள் கோபி, ராஜசேகர் மற்றும் சாரண ஆசிரியர் வீரமணி, ரெட் கிராஸ் ஆசிரியர் துரைசிங்கம் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.