தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை வட்டாரத்தில் உள்ள அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் தற்போது மத்திய மற்றும் குறுகிய கால விதை நெல் ரகங்கள் மானியத்தில் விநியோகிக்கப்படுகின்றன என வேளாண்மை உதவி இயக்குநர் வெ. சுஜாதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: பிபிடி 5204, டிகேஎம் 13, என்எல்ஆர், சுவர்ணாசப், திருச்சி 3 ஆகிய மத்திய கால ரகங்கள் அம்மாபேட்டை, சாலியமங்கலம், திருக்கருகாவூர், மெலட்டூர் ஆகிய விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.
டிகேஎம் 13 சன்ன ரகம், 130 நாள் வயது, சாயாத தன்மை, குலை நோய் எதிர்ப்பு சக்தி உடையது. சுவர்ணாசப் விதை நெல் ரகம் 135 நாள் வயதுடையது. வறட்சி, வெள்ளத்தைத் தாங்கும். பூச்சி, நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.
திருச்சி 3 - 130 நாள் வயதுடையது. களர், உவர் மண் வகைகளுக்கு ஏற்றது. அதிக மகசூல், பூச்சி, நோய் எதிர்ப்பு திறன் கொண்டது. இந்த விதைகளுடன் சேர்த்து வழங்கப்படும் உயிர் உரங்களைக் கட்டாயம் நடவு வயலில் இட்டு விட வேண்டும். அவை நம்மால் அதிக அளவில் கொடுக்க முடியாத இயற்கை மக்கு உரத்தை மண்ணுக்கு அளிக்கின்றன. மேலும் நெற்பயிருக்குத் தேவையான நுண்ணூட்டச் சத்து உரங்களும் இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.