தஞ்சாவூரில் கலால் துறை வட்டாட்சியர் வீட்டில் வியாழக்கிழமை 13 பவுன் நகைகள், ரொக்கத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகேயுள்ள ரஹ்மான் நகரைச் சேர்ந்தவர் ப. அருணகிரி (42). இவர் தஞ்சாவூர் கலால் துறையில் வட்டாட்சியராகப் பணியாற்றி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு வரை தஞ்சாவூர் வட்டாட்சியராகப் பணியாற்றினார்.
இவர் வியாழக்கிழமை காலை வீட்டைப் பூட்டிவிட்டு புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரில்நடைபெற்ற திருமணத்துக்காகக் குடும்பத்துடன் சென்றார்.
மீண்டும் பிற்பகல் 3.15 மணியளவில் வீட்டுக்குத் திரும்பிய இவர் வீட்டில் பொருள்கள் சிதறிக் கிடப்பதை பார்த்தார். மேலும், பின்புறக் கதவு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது.
பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 13 பவுன் நகைகள், ரூ. 70,000 ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி போலீஸார் விசாரிக்கின்றனர்.