தஞ்சாவூர் கீழ்ப்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கம்பம் வியாழக்கிழமை மாலை பெயர்ந்து விழுந்தது.
தஞ்சாவூர் கீழ்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்வதைத் தடுப்பதற்காக இருபுறமும் குறிப்பிட்ட உயரத்துக்கு இரும்புக் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. மேலே உள்ள ரயில்வே பாலத்தின் பாதுகாப்புக் கருதி இக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, சில மாதங்களுக்கு முன்பு லாரியில் ஏற்றப்பட்டு வந்த சரக்குகள் உரசி உடைந்தது.
இந்நிலையில், வியாழக்கிழமை மாலை லாரியில் ஏற்றப்பட்டு வந்த நெல் மூட்டைகள் இக்கம்பத்தில் சிக்கியது. இதனால், கம்பம் பெயர்ந்து விழுந்தது. அப்போது, அங்கு யாரும் இல்லாததால், யாருக்கும் பாதிப்பில்லை. இதனால், அப்பகுதியில் சுமார் ஒன்றரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று கிரேனை வரவழைத்து, இரும்புக் கம்பத்தைத் தூக்கி வைத்தனர்.