உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தஞ்சாவூரில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், அதற்கான முன்னேற்பாடு பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிக்கான 190 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் நீதிமன்றச் சாலையில் உள்ள பழைய ஆட்சியரகக் கட்டடத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த இயந்திரங்களின் செயல்பாடு குறித்து சரிபார்க்கும் பணியை பாரத் மின்னணு நிறுவனத்தைச் (பெங்களூரு) சேர்ந்த 4 பொறியாளர்கள் திங்கள்கிழமை தொடங்கினர். ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி) பாரதிதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் (உள்ளாட்சி தேர்தல்) விஜய் முன்னிலையில் இப்பணி நடைபெற்று வருகிறது.
மேலும், கர்நாடகத்திலிருந்து 5,300 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒரு வாரத்தில் கொண்டு வரப்படவுள்ளது என அலுவலர்கள் தெரிவித்தனர்.
உள்ளாட்சித் தேர்தலில் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, இரு நகராட்சிகள், 22 பேரூராட்சிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகளில் வாக்குச் சீட்டு முறையும் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.