பாபநாசம் வட்டாரத்தை சேர்ந்த கிராம அளவிலான மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கான செயல் ஒருங்கிணைப்பு பயிற்சி வகுப்பு பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பயிற்சி வகுப்பை பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) அறிவானந்தம் முன்னிலை வகித்தார்.
பயிற்சி வகுப்பில் முதன்மை பயிற்றுநர்கள் ஜெ. பாத்திமா மேரி, எஸ். தேவிகலா உள்ளிட்டோர் கலந்து கொண்டு, கிராம ஊராட்சிகளில் அரசு நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தல் குறித்து பயிற்சி அளித்தனர்.
இதில் பாபநாசம் வட்டாரத்தை சேர்ந்த அனைத்து மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், கிராம வறுமை ஒழிப்பு விழிப்புணர்வு சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
முன்னதாக, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) புவனேஸ்வரி வரவேற்றார். நிறைவில் உதவியாளர் து. தங்கப்பன் நன்றி கூறினார்.