தஞ்சாவூரில் சாலையில் கழிவு நீர் ஓடுவதைக் கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் அருகேயுள்ள ராஜீவ் நகரில் புதை சாக்கடை ஆள் நுழைவு குழாய்களிலிருந்து கழிவு நீர் வழிந்து சாலையில் ஓடுகிறது. இப்பிரச்னை ஒரு வாரமாக உள்ளது. மேலும், சாலையும் மேடு, பள்ளமாக இருக்கிறது. தற்போது பெய்து வரும் மழையால் சகதியுடன் கூடிய சாலையாக மாறிவிட்டது. இதனால், அப்பகுதி மக்கள் சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் புகார் செய்தும் நடவடிக்கை இல்லையாம். இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் தொல்காப்பியர் சதுக்கம் அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகல் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கிழக்கு போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாநகராட்சி அலுவலர்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 40 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.