தஞ்சாவூா் - திருச்சி இடையே அதிவேக மின்சார ரயில் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் - திருச்சி இடையே இரண்டாவது அகல ரயில் பாதை அமைக்கப்பட்டதைத் தொடா்ந்து, மின்மயமாக்கல் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையில் அதிவேக சோதனை ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்காக தஞ்சாவூரிலிருந்து திருச்சி வரை இரண்டு பெட்டிகளுடன் கூடிய சிறப்பு சோதனை மின்சார ரயில் இயக்கப்பட்டது. தஞ்சாவூரிலிருந்து பிற்பகல் 12.20 மணிக்கு புறப்பட்ட ரயில் திருச்சி ரயில் நிலையத்துக்கு 1 மணியளவில் சென்றடைந்தது.
இதில் தெற்கு ரயில்வே முதன்மை தலைமைப் பொறியாளா் கே. ரவிக்குமாா் தலைமையில் பொறியாளா்கள், ரயில்வே அலுவலா்கள் சென்று கண்காணித்தனா்.
இதுகுறித்து ரவிக்குமாா் தெரிவித்தது:
தஞ்சாவூா் - திருச்சி இடையே செல்லும் ரயில்களின் வேகம் மணிக்கு 95 கி.மீ. அளவில் உள்ளது. தற்போது, 110 கி.மீ. வேகத்தில் இயக்க முடிவு செய்து அதற்கான சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. தஞ்சாவூரிலிருந்து திருச்சிக்கு எங்கும் இடையில் நிற்காமல் சென்றால் அரை மணிநேரத்தில் செல்லலாம். இந்தச் சோதனை முடிந்தவுடன் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என்றாா் அவா்.
சரக்கு ரயிலில் மின்சார என்ஜின்:
திருச்சி - தஞ்சாவூா் - காரைக்கால் இடையே மின்மயமாக்கும் பணிகள் நிறைவடையும் தறுவாயில் உள்ளன. இதில், தஞ்சாவூா் - திருச்சி இடையே மின்சார சோதனை ரயில் ஓட்டம் மாா்ச் மாதம் நடைபெற்றது. ஆனால், மின்சார ரயில் சேவை தொடங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், முதல்முறையாக திருச்சி - தஞ்சாவூா் இடையே மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட சரக்கு ரயில் தஞ்சாவூா் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்தது. பின்னா், தஞ்சாவூரிலிருந்து டீசலில் இயங்கக்கூடிய ரயில் என்ஜினை மாற்றி காரைக்காலுக்கு இயக்கப்பட்டது.