பட்டுக்கோட்டையை அடுத்த சாந்தாங்காடு கிராமத்தில் மனோரா ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கால்நடை மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் அழைத்து வந்த சுமார் 400 மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் வீரமணி, பார்த்தசாரதி, ரவிச்சந்திரன் ஆகியோர் குடற்புழு நீக்கம், மலடு நீக்கம் ஆகியவற்றுக்கான சிகிச்சையளித்து, இலவச மருந்து, மாத்திரைகளை வழங்கினர். மேலும், பல மாடுகளுக்கு சினை ஊசி போடப்பட்டது. சிறப்பாக பராமரிக்கப்படும் கால்நடைகளின் உரிமையாளர்கள் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சிக்கு, மனோரா ரோட்டரி சங்கத் தலைவர் என். நடராஜன் தலைமை வகித்தார். மண்டல துணை ஆளுநர் ஆர். ஜெயவீரபாண்டியன் முன்னிலை வகித்தார். சங்கப் பொருளாளர் சீதாராமன், உறுப்பினர்கள் ராஜப்பா, கல்யாணகுமார், எம்.எஸ்.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடக்கத்தில், ரோட்டரி மண்டலச் செயலர் ஆர். அண்ணாதுரை வரவேற்றார். நிறைவில், மனோரா ரோட்டரி சங்கச் செயலர் சிவ.சரவணன் நன்றி கூறினார்.