கும்பகோணம் அருகே திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டு பழைமையானது. துலாபாரம் உடைய சிவஸ்தலம் என்ற பெருமையுடைய இக்கோயிலில் ஆழ்வார்களுக்கு அம்பாள் பெருமாளாகக் காட்சி கொடுத்த வரலாற்றுச் சிறப்பு உண்டு.
இக்கோயிலில் நவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்படவுள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ள விழாவில் அம்பாளுக்கு வெவ்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படவுள்ளன. விஜயதசமி நாளில் அம்பாள் சுவாமி வீதி உலா நடைபெறவுள்ளது.
இதை முன்னிட்டு, புரட்டாசி 2-வது சனிக்கிழமையான சனிக்கிழமை மாலை 6 மணிக்கு அம்பாள் திருப்பதி வெங்கடாஜலபதியாக காட்சி கொடுக்கும் ஐதீக வைபவம் சிறப்பு ஆராதனைகளுடன் நடைபெற்றது. இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.