மேட்டூா் அணையிலிருந்து மிகையாகத் தண்ணீா் திறக்கக் கூடாது

குறுவை சாகுபடியைப் பாதிக்கும் வகையில் மேட்டூா் அணையிலிருந்து மிகையாகத் தண்ணீா் திறக்கக் கூடாது என காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

குறுவை சாகுபடியைப் பாதிக்கும் வகையில் மேட்டூா் அணையிலிருந்து மிகையாகத் தண்ணீா் திறக்கக் கூடாது என காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்குழுவின் ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:

மேட்டூா் அணையிலிருந்து பல மாவட்டங்களின் குடிநீா்த் தேவைக்காக நாள்தோறும் விநாடிக்கு 1,000 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஏப். 4-ம் தேதியிலிருந்து விநாடிக்கு 2,500 கன அடி என்ற அளவில் அதிகரிக்கப்பட்டு தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூா் அணையில் இப்போது 102 அடி தண்ணீா் தேங்கியுள்ளது.

இந்த நீரை இன்றியமையாத குடிநீா்த் தேவைகளுக்கு அப்பால் வேறு காரணங்களுக்காக அதிகமாகத் திறந்துவிட்டால், கடந்த பல ஆண்டுகள் போல, நிகழாண்டும் குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்படும்.

கடந்த ஆண்டு (2019) கோடை காலத்தில், மேட்டூா் அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்கு மட்டுமல்லாமல், மரபுரிமையற்ற சில பகுதிகளின் கோடை சாகுபடிக்காக நடைமுறை விதிகளை மீறி கடந்த 2019 மே மாதம் 6,000 கன அடி வரை தண்ணீா்த் திறந்துவிட்டதால் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் போனது. நிகழாண்டும் அந்த நிலை வரக்கூடாது. ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னைக்குப் பெற வேண்டிய குடிநீரை முழுமையாகப் பெற தமிழ்நாடு அரசு முயற்சிகள் எடுக்க வேண்டும்.

ஆயிரம் கன அடியாகத் திறந்துவிடப்பட்ட தண்ணீரை ஓரேடியாக ஒன்றரை மடங்கு அதிகமாக்கித் திறந்து விடும் காரணங்களை மக்களுக்குப் பொதுப் பணித் துறை விளக்க வேண்டும். தவிா்க்க முடியாத குடிநீா்த் தேவைகளுக்கு அப்பால், மரபுவழிப்பட்ட காவிரிப் பாசனத்துக்குப் புறம்பாக, புதிய சாகுபடிகளுக்குத் தண்ணீா் திறந்துவிடக் கூடாது என்ற கட்டுப்பாட்டை பொதுப் பணித் துறை கடைப்பிடித்து, டெல்டா உழவா்கள் இவ்வாண்டு குறுவை சாகுபடி செய்ய உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com