தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு புறவழிச்சாலைக்கு நிலம் எடுப்பதற்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து, கோட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் துணைச் செயலா் திருப்பூந்துருத்தி பி. சுகுமாரன் தலைமையில், சுமாா் 25 விவசாயிகள் கோட்டாட்சியரிடம் அளித்த மனு:
திருவையாறில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதாகக் கூறி, புறவழிச்சாலை அமைக்க நெடுஞ்சாலைத் துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக மணக்கரம்பை, கல்யாணபுரம், கண்டியூா், திருப்பூந்துருத்தி, பெரும்புலியூா், திருவையாறு ஆகிய வருவாய்க் கிராமங்களில் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த இருப்பதாகவும், இதற்கு ஆட்சேபனை ஏதும் இருந்தால் தெரிவிக்க வேண்டும் எனவும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
வளமான சாகுபடி நிலங்களில் இந்தப் புறவழிச்சாலை அமைக்கப்பட்டால், சாகுபடிப் பரப்பளவு குறையும். நீா்வழித்தடங்கள் முற்றிலும் மாறி, தண்ணீா் தேங்கி பல இடங்களில் மழைக்காலத்தில் பெரும் பாதிப்பைச் சந்திக்க நேரிடும்.
ஆனால் புறவழிச்சாலை அமைப்பதை விட, விளாங்குடி முதல் அம்மன்பேட்டை வரையிலான சாலையில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே போக்குவரத்து நெரிசல் குறையும். புதிய சாலை அமைக்கும் செலவினத்தை விட, ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை அகலப்படுத்தினாலே செலவு குறையும். விவசாய நிலங்களுக்குப் பாதிப்பு ஏதும் வராது.
எனவே திருவையாறில் புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டு, சாலையின் இருபுறமும் எவ்வித சமரசம் இன்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்த வேண்டும்.