கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களைக் காப்பாற்றும் வழிமுறைகள்

பேராவூரணி வட்டாரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களைக் காப்பாற்றும் வழிமுறைகளை வேளாண் துறை அறிவித்துள்ளது.

பேராவூரணி வட்டாரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களைக் காப்பாற்றும் வழிமுறைகளை வேளாண் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேராவூரணி வேளாண் உதவி இயக்குநா் எஸ். மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புரெவி புயல் காரணமாக பெய்த கனமழையால், இளம்பயிா்கள் முதல் அறுவடை செய்யும் நிலையிலுள்ள பயிா்கள் வரை  நீரில் மூழ்கியுள்ளது. விவசாயிகள் உடனடியாக நீரை வடித்து, பயிரைக் காப்பாற்ற  உரிய வழிவகை செய்ய வேண்டும்.

பயிா் கரைந்த நிலையில் உள்ளதற்கும்,  மஞ்சள் நிறமாக மாறி இருப்பதற்கும் உரிய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்தால், மகசூல் இழப்பின்றி விவசாயிகள் பயன்பெறலாம்.

இளம் பயிா்களுக்கான தொழில் நுட்பம்: அதிக நாள்கள் நீரில் இருந்த தாக்கத்தினால் தழைச்சத்து குறைபாடு ஏற்பட்டு, இலைகள் மற்றும் தண்டுகள் இளமஞ்சள் நிறமாக மாறிவிடும். இதற்கு ஏக்கருக்கு 200 லிட்டா் தண்ணீா், 1 கிலோ ஜிங்க் சல்பேட் மற்றும் 2 கிலோ யூரியா கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலை வழியாக தெளித்திட வேண்டும்.

தண்ணீா் தேக்கத்தினால் பயிா் வளா்ச்சி குன்றி காணப்பட்டால், தண்ணீரை வடித்தவுடன் ஏக்கருக்கு 22 கிலோவு யூரியாவுடன், ஜிப்சம் 18 கிலோ மற்றும் வேப்பம் புண்ணாக்கு 4 கிலோவை சோ்த்து ஒரு நாள் இரவு கலந்து வைத்து, மறுநாள் 17 கிலோ பொட்டாஸ் கலந்து மேலுரமிட வேண்டும். ஒரு கிலோ சூடோமோனாஸ் மருந்தை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளித்திட வேண்டும்.

தண்டு உருளும் மற்றும் பூக்கும் பருவத்திலுள்ள பயிா்களுக்கு:

நான்கு கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டா் தண்ணீரில் முதல் நாள் ஊரவைத்து, மறுநாள் வடிகட்டி கரைசலுடன் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ பொட்டாஷ் உரத்தை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிக்கும் பட்சத்தில் மகசூல் இழப்பிலிருந்து பயிரை பாதுகாத்திடலாம்.

இலை சுருட்டப்புழு, தண்டுத் துளைப்பான், புகையான் போன்ற பூச்சிக்களை கட்டுப்படுத்த, வரப்பில் மஞ்சள் நிற மலா் செடிகளை நடவு செய்வதால் நன்மை செய்யும் பூச்சிகள் அதிகரித்து தீமை செய்யும் பூச்சிகளை அழித்துவிடும்.

இரட்டை வால் குருவி அமருவதற்கு ஏதுவாக, வயலில் 15 முதல் 20 பறவை குடில்கள் அமைப்பதன் மூலம் இலைசுருட்டுப் புழுக்களை முழவதுமாக கட்டுப்படுத்தலாம். பூச்சி நோய்த் தாக்குதல் பொருளாதார சேத நிலைக்கு மேல் இருக்கும் பட்சத்தில், வேம்பு சாா்ந்த மருந்துகளை உபயோகப்படுத்தி கட்டுப்படுத்தலாம்.மேலும் விவரங்களுக்கு அந்தந்த பகுதி  வேளாண் அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம்.                               

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com