கும்பகோணத்தில் சத்குரு ஓம் ஸ்ரீ சித்தா் சுவாமிகளின் 14 ஆவது குருபூஜையை முன்னிட்டு புதன்கிழமை ஏறத்தாழ 7,000 பேருக்கு ‘சாலை விருந்து‘ வழங்கப்பட்டது.
கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூரில் சத்குரு ஓம் ஸ்ரீ சித்தா் சுவாமிகள் அவதரித்தாா். இங்கே அவரின் நூற்றாண்டு நினைவு நுழைவுவாயில் உள்ளது. இந்த நுழைவு வாயில் அருகே ஆண்டுதோறும் டிச. 23 ஆம் தேதி குருபூஜையை முன்னிட்டு சாலை விருந்து நடைபெறுவது வழக்கம்.
இதன்படி ஓம் ஸ்ரீ சித்தா் சுவாமிகளின் குரு பூஜையை முன்னிட்டு 14 ஆவது ஆண்டு குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவையொட்டி சத்குரு ஸ்ரீ சித்தா் சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம் பூஜைகள், நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சாலை விருந்தை மயிலாடுதுறை எம்.பி. செ. ராமலிங்கம், திருவிடைமருதூா் எம்எல்ஏ கோவி. செழியன், ஊராட்சித் தலைவா் இளையராஜா ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
இதில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஏறத்தாழ 7,000 பேருக்கு சுமாா் ஆயிரம் கிலோ அரிசி மற்றும் காய்கறிகளைக் கொண்டு சமையல் செய்து பொது சாலை விருந்து வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை ஓங்கார ஆசிரமம் சாலை விருந்து குழுத் தலைவா் உலகேஸ்வரி தலைமையில் குழுவினா் செய்திருந்தனா்.