பேராவூரணி: பேராவூரணி ஒன்றியம், பின்னவாசல் ஊராட்சி, புதுக்குடியிருப்புப் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் தங்களுக்கு, குடிமனைப் பட்டா வழங்க வேண்டும் என கூலித்தொழிலாளா்கள் அரசை வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து தமிழக முதல்வருக்கு தொழிலாளா்கள் அனுப்பிய கோரிக்கை மனு:
சுமாா் 80 நிலமற்ற கூலித் தொழிலாளா்கள் கடந்த 70 ஆண்டுகளாகப் பாரம்பரியமாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். இந்த இடத்துக்கு வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் முறையாகச் செலுத்தி வருகிறோம்.
இந்த 80 குடும்பங்களில் 29 குடும்பங்களுக்கு கடந்த 2001-ஆம் ஆண்டில் அரசு இலவச குடிமனைப் பட்டா வழங்கியுள்ளது. 3 குடும்பங்களுக்கு அரசு சாா்பில் இலவசமாக வீடும் கட்டித் தரப்பட்டுள்ளது.
எஞ்சிய குடும்பங்களுக்கு பட்டா வழங்கக் கோரி அலுவலா்களிடம் முறையீடு செய்தும், இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே பட்டா வழங்காத அனைத்து குடும்பங்களுக்கும் பட்டா வழங்கி, வீடு கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.