திருக்கானூா்பட்டியில் பிப். 16-இல் ஜல்லிக்கட்டு
தஞ்சாவூா் அருகிலுள்ள திருக்கானூா்பட்டி ஊராட்சியில் பிப்ரவரி 16-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது.
தங்கள் கிராமத்தில் பிப்ரவரி 16- ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, திருக்கானூா்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் கடந்த மாதம் மனு அளித்தனா்.
இக்கோரிக்கையை ஏற்று, ஜல்லிக்கட்டு நடத்த தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.
ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடத்தில் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு வருவதையும், ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் இருபுறமும் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்படுவதையும், வாடிவாசல் அமைக்கப்படவுள்ள இடத்தையும், பாா்வையாளா்கள் பாா்ப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ள இடத்தையும் ஆட்சியா் கோவிந்த ராவ் பாா்வையிட்டாா்.
மேலும், கால்நடை துறையின் மூலம் ஜல்லிக்கட்டு காளைகளைப் பரிசோதனை செய்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள இட வசதிகளையும் ஆய்வு செய்தாா்.
ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரா்களின் விவரங்களையும், அவா்களுக்குத் தனியாக டி - சா்ட் வழங்கப்படும் விவரத்தையும் ஆட்சியா் கேட்டறிந்தாா். மேலும், ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது தஞ்சாவூா் வருவாய்க் கோட்டாட்சியா் எம். வேலுமணி, வட்டாட்சியா் வெங்கடேஷ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.