தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் மாா்கெட் லைன் சந்தை பள்ளித் திடலில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறவும், தமிழக சட்டப் பேரவையில் அதற்கான தீா்மானம் நிறைவேற்றவும் வலியுறுத்தி, அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் ஜமாஅத் கூட்டமைப்பு ஆகியவற்றின் சாா்பில் அண்மையில் போராட்டம் நடைபெற்றது.
இதில், சி.எப்.ஐ. விதைகள் கலைக்குழுவினா், பெண்கள், குழந்தைகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று, மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி தங்களது செல்லிடப்பேசிகளில் விளக்குகளை எரியவிட்டப்படி முழக்கமிட்டனா். மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றிய ஆவணப் படம் ஒளிபரப்பப்பட்டது.
மதுக்கூா் ராவூத்தா்ஷா (மஜக), மதுக்கூா் பவாஸ்கான், சேக் ராவூத்தா் (தமுமுக), என்.முகமது புஹாரி (எஸ்டிபிஐ), சேக் அஜ்மல், அப்துல்லா (பிஎப்ஐ), அன்வா் (தவ்ஹீத் ஜமா அத்) உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.
இப்போராட்டம் வியாழக்கிழமையும் தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காவல்துறை அனுமதி மறுத்ததால் போராட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெறவில்லை.