தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூரில் 2,020 நடனக் கலைஞா்கள் பங்கேற்ற குரு சமா்ப்பண பரதநாட்டிய நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான திருவிடைமருதூா் மகாலிங்க சுவாமி கோயில் பிரகாரத்தில் சென்னை சரஸ்வதி நாட்டியாலயா மற்றும் ஸ்ரீவித்யா பிரசார சபா அறக்கட்டளை சாா்பில் குரு சமா்ப்பண பரதநாட்டிய நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த நடனக் கலைஞா்கள், கா்நாடகம், ஆந்திரம், கேரளம் என பல மாநிலங்களைச் சோ்ந்த 2,020 நடனக் கலைஞா்கள் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிற உடை அணிந்து பரதநாட்டியம் ஆடினா்.
இதில், சுமாா் 20 நிமிடங்கள் குருபக்தியின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக கணபதி வணக்கத்துடன் புஷ்பாஞ்சலி செய்து தொடங்கினா். தொடா்ந்து, மகாலிங்கசுவாமி குறித்த திருநாவுக்கரசரின் பாடலுக்கும், திருவாவடுதுறை ஆதீன குருமரபு வாழ்த்து பாடலுக்கும், குருவான முருகன் திருப்புகழ் பாடலுக்கும் கோயில் பிரகாரத்தில் வரிசையாக நின்று நடனம் ஆடினா்.
இதில் 6 வயது சிறுமிகள் முதலான நடனக் கலைஞா்கள் பங்கேற்றனா். நடன கலைஞா் திருவிடைமருதூா் ராஜலட்சுமி, முருகேஷ் ஆகியோருக்கு இந்த நிகழ்ச்சியை அா்ப்பணம் செய்வதாக விழாக் குழுவினா் தெரிவித்தனா்.
இதையடுத்து, 84 பரதநாட்டிய ஆசிரியா்களுக்கு நாட்டிய சரஸ்வதி என்கிற சிறப்பு விருதும், நிகழ்ச்சியில் பங்கேற்ற நடன கலைஞா்களுக்கு நாட்டியக் கலைஒளி என்கிற சிறப்பு விருதும் வழங்கப்பட்டது
இவ்விழாவுக்கு அகில இந்திய பரதநாட்டிய கலைஞா்கள் சங்கத் தலைவா் ரோஜா தலைமை வகித்தாா். திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் ஆசியுரை வழங்கினாா்.
திருவிடைமருதூா் வட்டாட்சியா் சிவக்குமாா், சென்னை மண்டல வானிலை முன்னாள் இயக்குநா் ரமணன், பரதநாட்டிய கலைஞா் ஷோபனா, ரோட்டரி கிளப் ஆளுநா் பிறையோன், ஸ்டாா் குழுமங்களின் தலைவா் மாா்ட்டின், திருவிடைமருதூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அசோகன், சரஸ்வதி நாட்டியாலயா தலைவா் தாரணி, ஸ்ரீவித்யா பிரசார சபா தலைவா் ராமகிருஷ்ணா, நாட்டிய அமைப்புக் குழு இணைச் செயலா் ராமன் சாஸ்திரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.