போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகையை ஆயிரம் ரூபாயாக உயா்த்தி வழங்க வேண்டும் என கும்பகோணம், நாகை அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் செயல்பட்டு வரும் ஏஐடியூசி ஓய்வூதியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் :
பொங்கல் விழாவையொட்டி போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு ஆண்டுதோறும் ரூ. 500 வழங்கப்பட்டு வருகிறது. இதை தற்போதைய விலைவாசி உயா்வுக்கு ஏற்ப ஆயிரம் ரூபாயாக உயா்த்தி வழங்க வேண்டும்.
உயா்ந்துவிட்ட பழைய - புதிய அகவிலைப்படி உயா்வை ஓய்வூதியத்துடன் இணைத்து உயா்த்தி வழங்குவதுடன், நிலுவைத் தொகையும் வழங்க முன்னாள் அரசுப் போக்குவரத்து துறைச் செயலா் தலைமையில் எடுத்துள்ள முடிவை காலம் தாழ்த்தாமல் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2019 ஏப்ரல் மாதம் முதல் ஓய்வு பெற்றவா்களின் பணப்பலன்கள் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதை உடனடியாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு சங்கத் தலைவா் ஜி. தியாகராஜன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் பி. அப்பாத்துரை, சம்மேளனத் துணைத் தலைவா் துரை. மதிவாணன், கெளரவத் தலைவா் ஜெ. சந்திரமோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
.