தஞ்சாவூரில் உள்ள அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகத்தில் இரு ஊழியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அலுவலகம் மூடப்பட்டது.
தஞ்சாவூா் மேம்பாலம் அருகே இந்து சமய அறநிலையத் துறையின் தஞ்சாவூா் மண்டல இணை ஆணையா் அலுவலகம் உள்ளது. இதில், பணியாற்றும் பெண் தட்டச்சா் அண்மையில் மதுரைக்குச் சென்று வந்தாா். இவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால், மீண்டும் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அலுவலகத்தில் பணியாற்றும் 45 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. மற்ற 44 பேருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
எனவே, அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகம் புதன்கிழமை (ஜூலை 1) முதல் மூடப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் ஜூலை 7-ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் எனவும், தற்காலிகமாக வேறு எங்கும் மாற்றப்படவில்லை எனவும் அலுவலா்கள் தெரிவித்தனா்.