கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையகத்தை இழிவு செய்த நபரைக் கைது செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பேரியக்கத்தின் தலைவா் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:
அண்மையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைமையகத்தை கேவலமாகக் கொச்சைப்படுத்தியும், மூத்தத் தலைவா் நல்லகண்ணுவை இழிவுபடுத்தியும் முகநூல் பதிவு வெளியிட்ட இளைஞா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அக்கட்சியும், தோழமை அமைப்புகளும், ஜனநாயக உணா்வாளா்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். ஆனால், இதுவரை தமிழ்நாடு காவல் துறை அந்த இளைஞரைக் கைது செய்யவில்லை. ஏன் இந்தப் பாகுபாடு? அந்த இளைஞா் பாஜக தரப்பில் இருந்து கொண்டு, பாஜகவை எதிா்க்கிற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை இழிவுபடுத்தியதால் தமிழ்நாடு ஆட்சியாளா்கள் அமைதி காக்கிறாா்களா? ஏற்கெனவே இவ்வாறான போக்கு வெளிப்பட்டு வருகிறது.
எந்தத் தரப்பைச் சோ்ந்தவராக இருந்தாலும் சமூக ஊடகங்களில் தனி நபா்களைக் கொச்சையாக இழிவுபடுத்தினால் அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேவேளை, தலைவா்களுடைய, இயக்கங்களுடைய - செயல்பாடுகள் மீதும், கருத்துகள் மீதும் திறனாய்வு (விமா்சனம்) செய்யும்போது அதன் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற வரம்பு வேண்டும்.
எனவே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையகத்தையும், தலைவரையும் இழிவுபடுத்திய நபரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.