மேட்டூர் அணைத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கல்லணை ஜூன் 16 ஆம் தேதி திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் ம கோவிந்த ராவ்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்தது: மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுப் பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மூலம் தூர்வாரும் பணி மற்றும் குடிமராமத்து பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
கல்லணையிலிருந்து ஜூன் 16 ஆம் தேதி தண்ணீர் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே அந்தந்தப் பகுதிக்குத் தண்ணீர் வருவதற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது 80 சதவீதத்துக்கும் அதிகமான பணிகள் முடிக்கப்பட்டு விட்டன.
மீதம் உள்ள 20 சத பணிகளும் அந்தந்தப் பகுதிக்குத் தண்ணீர் செல்வதற்குள் முடிக்கப்படும். இந்த முறை தண்ணீர் விரயமாகாமல் கடைமடைப் பகுதிக்கு நிச்சயமாக சென்றடையும் என்றார் ஆட்சியர்.