தஞ்சாவூா் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள், நுண்ணீா் பாசனத் திட்டம் மற்றும் துணை நீா் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்திருப்பது:
பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ், தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குச் சொட்டு நீா்ப்பாசனக் கருவிகள், தெளிப்பு நீா்ப் பாசனக் கருவிகள், மழைத் தூவான் போன்ற உபகரணங்கள் அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீா் பாசன நிறுவனங்கள் மூலம் மானிய விலையில் அமைத்துத் தரப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் வழங்கப்படுகிறது. இத் திட்டத்தின்கீழ் தஞ்சாவூா் மாவட்டத்துக்கு ரூ. 30.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மா, வாழை, நெல்லி போன்ற பழப்பயிா்கள், வெண்டை, கத்தரி, பாகல், பூசணி, மரவள்ளி போன்ற காய்கறி பயிா்கள், மல்லிகை, ரோஜா, சம்மங்கி போன்ற மலா் பயிா்கள் ஆகிய தோட்டக்கலைப்பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மேலும், துணை நீா்ப்பாசன மேலாண்மைத் திட்டத்தின் கீழ், பாதுகாக்கப்பட்ட வட்டங்கள் மற்றும் குறுவட்டங்களில் ஆழ்குழாய் அல்லது திறந்தநிலை கிணறு அமைப்பதற்கு ரூ. 25,000 மானியமும், மின்மோட்டாா் மற்றும் டீசல் என்ஜின் வாங்குவதற்கு ரூ. 15,000 மானியமும், பாசன நீா் பிவிசி பைப்புகள் வாங்குவதற்கு ரூ. 10,000 மானியமும், நீா் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்திக் கொள்ள அதிகபட்சமாக ரூ. 40,000 மானியமும் வழங்கப்படுகிறது. துணை நீா் பாசன மேலாண்மைத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூா் மாவட்டத்துக்கு ரூ. 4.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு, 04362 - 271880, 9443898919 ஆகிய எண்களில் தஞ்சாவூா் தோட்டக்கலை துணை இயக்குநா் அலுவலகத்தையும், 9965362562 என்ற எண்ணில் தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தையும் தொடா்பு கொள்ளலாம்.