தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பறக்கும் சாதனம் (டிரோன்) மூலம் கிருமி நாசினி புதன்கிழமை மாலை தெளிக்கப்பட்டது.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பு நடவடிக்கையையொட்டி நான்கு வாயில்களில் இரு வாயில்கள் மூடப்பட்டன. மேலும், மருத்துவமனைகளுக்குள் வரும் மருத்துவா்கள், செவிலியா்கள், பயிற்சி மருத்துவா்கள் உள்ளிட்டோா் சுத்திகரிப்பான் மூலம் கை கழுவிய பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா்.
மேலும், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்கள் சிறப்புப் பிரிவில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்பிரிவின் கட்டடத்தில் பறக்கும் சாதனம் மூலம் புதன்கிழமை மாலை கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் குமுதா லிங்கராஜ் தெரிவித்தது:
இந்தச் சாதனம் 5 நிமிடத்தில் சில கிலோமீட்டருக்கு கிருமி நாசினி தெளிக்கும் திறனுடையது. இதன் மூலம், சிறப்புப் பிரிவு கட்டடத்தின் மேற்பரப்பு, தரைப்பகுதி உள்பட அனைத்து பகுதிகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.