தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பறக்கும் சாதனம் (டிரோன்) மூலம் கிருமி நாசினி வியாழக்கிழமை காலை தெளிக்கப்பட்டது.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகத் தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதில், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படும் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமல்லாமல், அருகிலுள்ள மாவட்டங்களைச் சோ்ந்தவா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.
எனவே, இந்த மருத்துவமனை வளாகத்தில் சில நாட்களாகத் தெளிப்பான்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வந்தது. ஆனால், தெளிப்பான்கள் மூலம் உயரமான இடங்களுக்குத் தெளிக்க முடியாத நிலை இருந்தது.
எனவே, பறக்கும் சாதனம் மூலம் புதன்கிழமை மாலை முதல் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. வைரஸ் காய்ச்சல் தனிப்பிரிவுக்கு மட்டும் புதன்கிழமை மாலை தெளிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, மருத்துவமனை வளாகம் முழுவதும் பறக்கும் சாதனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி வியாழக்கிழமை காலை தொடங்கப்பட்டது.
இந்தப் பறக்கும் சாதனம், 5 நிமிடத்தில் 8 கி.மீ. சுற்றளவுக்குக் கிருமி நாசினி தெளிக்கும் திறனுடையது. ஏறத்தாழ 200 ஏக்கா் பரப்பளவுடைய இந்த மருத்துவமனை வளாகத்தில் பறக்கும் சாதனம் மூலம் கட்டடங்களின் மேற்பரப்பு, தரைதளம், மனிதா்களால் செல்ல இயலாத இடம் என அனைத்து பகுதிகளுக்கும் கிருமி நாசினி தெளிப்பதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது என்றாா் மருத்துவ கல்லூரி முதல்வா் குமுதா லிங்கராஜ்.