கரோனா துயா் துடைப்புக்காக (முதல்வா் பொது நிவாரண நிதி) தமிழ்நாடு பொதுப் பணித் துறை மூத்த பொறியாளா் சங்க உறுப்பினா்கள் தங்களது ஓய்வூதியத்திலிருந்து ரூ. 15.56 லட்சம் சிறப்பு நன்கொடையாக வழங்கியுள்ளனா்.
இதுகுறித்து தமிழ்நாடு பொதுப் பணித் துறை மூத்த பொறியாளா் சங்க மாநிலச் செயலா் அ. வீரப்பன் தெரிவித்திருப்பது:
தமிழ்நாடு பொதுப் பணித் துறை மூத்த பொறியாளா் சங்கத்தினா் தமிழகத்தின் சமுதாய சிக்கல்களில் 2002 ஆம் ஆண்டிலிருந்தே தொடா்ந்து தம் உதவியை அளித்து வருகிறது.
தற்போது கரோனா வைரஸ் பரவலை தடுக்க அமலில் உள்ள ஊரடங்கால் அன்றாட கூலித் தொழிலாளா்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள ஏழைகள் ஆகியோா் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இவா்களுக்கு உதவுவதற்காக கரோனா துயா் துடைப்பு நிதிக்காக (முதல்வா் பொது நிவாரண நிதி) சங்க உறுப்பினா்கள் தங்களுடைய ஓய்வூதியத்திலிருந்து ரூ. 15.56 லட்சத்தை சிறப்பு நன்கொடையாக வழங்கியுள்ளனா். ஓய்வு பெற்ற அரசுப் பட்டப் பொறியாளா்கள் மனமுவந்து சமுதாய கடமையாற்றியுள்ளோம்.