தஞ்சாவூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 3) முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளன.
மாவட்டத்தில் அத்தியாவசியத் தேவைகளுக்காக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு பச்சை, நீலம், ரோஸ் வண்ணங்களில் அனுமதி அடையாள அட்டைகள், மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, அத்தியாவசியத் தேவைகளுக்காக பொதுமக்கள் வாரத்தில் இரண்டு நாள்கள் மட்டுமே வீட்டைவிட்டு வெளியே வர முடியும். மூன்று வண்ண அடையாள அட்டைகளை ஞாயிற்றுக்கிழமைகளில் பயன்படுத்த முடியாது.
எனவே, தஞ்சாவூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்காகக் கடைப்பிடிக்கப்படும். தவிா்க்க முடியாத காரணங்களைத் தவிர, தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீா், பால் மற்றும் மருத்துவத் தேவைக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது என அவா் தெரிவித்துள்ளாா்.