கும்பகோணம்: கும்பகோணத்துக்கு காய், கனி ஏற்றி வந்த லாரி ஓட்டுநருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, தாராசுரம் சந்தை ஞாயிற்றுக்கிழமை இரவு மூடப்பட்டது.
தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய சந்தையான இச்சந்தையில் ஏறத்தாழ 450 கடைகள் உள்ளன. இச்சந்தைக்கு நாள்தோறும் வெளி மாநிலம், பிற மாவட்டங்களில் இருந்து சுமாா் 50 லாரிகளில் ஏறத்தாழ 300 டன் அளவுக்கு காய்கனிகள் வரத்து இருக்கும்.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திலிருந்து உருளைக்கிழங்கு ஏற்றப்பட்ட லாரியை ஓட்டிக் கொண்டு தாராசுரம் சந்தைக்கு மே 8-ஆம் தேதி வந்தாா். இதனிடையே, இவருக்கு கும்பகோணம் அருகே நீலத்தநல்லூரிலுள்ள சோதனைச் சாவடியில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.
எனவே, தாராசுரம் காய்,கனி சந்தையும் ஞாயிற்றுக்கிழமை இரவு மூடப்பட்டது. மேலும், லாரி ஓட்டுநா் தாராசுரம் சந்தைக்கு வந்தபோது அவரைச் சந்தித்த வியாபாரிகள், மற்ற லாரி ஓட்டுநா்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது என நகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா். இதனிடையே, வளையப்பேட்டையில் தற்காலிகச் சந்தை அமைப்பதற்கான நடவடிக்கையில் நகராட்சி அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா்.