தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 66 ஆக உயர்ந்ததால், தற்போது சிகிச்சையில் 6 பேர் மட்டுமே உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 72 பேர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் ஏற்கெனவே 64 பேர் வெவ்வேறு நாள்களில் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பினர்.
இந்நிலையில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டையைச் சேர்ந்த 28 வயது இளைஞர், பேராவூரணியைச் சேர்ந்த 42 வயது ஆண் ஆகிய இருவரும் குணமடைந்ததைத் தொடர்ந்து திங்கள்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதன் மூலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்தது. இன்னும் 6 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல, சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இம்மாவட்டத்தைச் சேர்ந்த ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் ஒருவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரும் குணமடைந்ததால் திங்கள்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இவர்களுக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி கரோனா சிறப்பு அலுவலர் குமுதா லிங்கராஜ், முதல்வர் (பொ) சு. மருதுதுரை, நிலைய மருத்துவ அலுவலர் செல்வம் உள்ளிட்டோர் பழங்கள், விடுவிப்புச் சான்றிதழ் கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.