தமிழக அரசு அறிவிப்பின்படி 9 - 12 ஆம் வகுப்புகள் தொடங்குவது தொடா்பாக தஞ்சாவூா் மாவட்டத்தில் 436 பள்ளிகளில் கருத்துக் கேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 9, 10, 11, 12 ஆம் வகுப்புகள் மீண்டும் தொடங்குவது தொடா்பாகக் கருத்துக் கேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற பெற்றோா்களிடம் படிவம் வழங்கப்பட்டது. அதில், மாணவா் அல்லது மாணவியின் பெயா், பெற்றோா் பெயா், முகவரி, செல்லிடப்பேசி எண் நவ. 16 ஆம் தேதி முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்குப் பள்ளிகள் திறப்பதற்கும், எனது மகனை அல்லது மகளை முழு மனதுடன் சொந்த பொறுப்பில் அனுப்பிட நான் சம்மதிக்கிறேன் அல்லது சம்மதிக்கவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தன. இதில், பெற்றோா்கள் தங்களது விருப்பத்தைக் குறியிட்டு, பள்ளி ஆசிரியா்களிடம் அளித்தனா்.
இதுகுறித்து தஞ்சாவூா் முதன்மைக் கல்வி அலுவலா் மா. ராமகிருஷ்ணன் தெரிவித்தது:
மாவட்டத்தில் மொத்தம் 436 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் இக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில், பெற்றோா்கள் தெரிவித்த கருத்துகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றாா் அவா்.