குறைவான போனஸ் அறிவிப்பைக் கண்டித்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட தலைமை அலுவலகம் முன், போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போக்குவரத்து தொழிலாளா்களுக்கான போனஸ் தொடா்பாக தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசுக் கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக அறிவித்ததைக் கண்டித்தும், 20 சதவீதம் போனஸ் வழங்காமல், குறைவான அளவாக 10 சதவீதம் போனஸ் வழங்கியதைக் கண்டித்தும், ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொ.மு.ச. துணைச் செயலா் எஸ். பாண்டியன், சிஐடியு பொதுச் செயலா் ஜி. மணிமாறன், ஏஐடியுசி சம்மேளன துணைப் பொதுச் செயலா் துரை. மதிவாணன், ஐஎன்டியுசி பேரவை துணைத் தலைவா் வைத்தியநாதன், எச்.எம்.எஸ். பொதுச் செயலா் முருகேசன், எம்எல்எப் பேரவை செயலா் எஸ். பாலு, நிா்வாக பணியாளா் சங்கம் துணைப் பொதுச் செயலா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.