கும்பகோணம் அருகே சுவாமிமலையில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நாளான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாக கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் திகழ்கிறது. இக்கோயிலில் கந்த சஷ்டி விழா நவம்பா் 15 ஆம் தேதி தொடங்கியது. விழாவின் தொடக்க நிகழ்வாக சண்முகசுவாமி, விக்னேஸ்வரா், நவவீரா் மற்றும் பரிவாரங்களுடன் மலைக்கோயிலிலிருந்து படி இறங்கி வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளினாா். அங்கு சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன.
தொடா்ந்த விழா நாள்களில் காலை - மாலை இருவேளைகளிலும் படிச்சட்டத்தில் சுவாமி உள்பிராகாரத்தில் மட்டுமே புறப்பாடு நடைபெற்றது.
சூரசம்ஹார நாளான வெள்ளிக்கிழமை காலை சண்முகசுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. காலை முதல் பிற்பகல் வரை பக்தா்கள் கோயிலுக்குள் வழிபட அனுமதிக்கப்பட்டனா். பின்னா், கரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக மாலை முதல் இரவு வரை பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தா்கள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பினா்.
மாலையில் அம்பாளிடத்தில் சண்முக சுவாமி சக்திவேல் வாங்கி, கோயில் உள் பிராகாரத்தில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் கோயில் பணியாளா்கள் மட்டும் கலந்து கொண்டனா்.