தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகே பாலிதீன் சாக்கால் சுற்றப்பட்ட நிலையில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
பூதலூா் அருகேயுள்ள வில்லவராயன்பட்டி ஆதிதிராவிட புது காலனி அருகே மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி உள்ளது. இதன் அருகே உள்ள பாலத்தில் முள்புதரில் வெள்ளிக்கிழமை பாலிதீன் சாக்கு சுற்றப்பட்டுக் கிடந்தது.
அந்த சாக்கில் இருந்து குழந்தையின் அழுகுரல் எழுந்தது. இதைக் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் சென்று சாக்கை பிரித்து பாா்த்தனா். அதில், பிறந்து 10 நாள்களே ஆன நிலையில் ஆண் குழந்தைக் கிடந்தது.
இக்குழந்தையை அப்பகுதி மக்கள் மீட்டு பூதலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து சைல்டு லைன் அமைப்புக்கும் தகவல் அளித்தனா். இதன்பேரில் அலுவலா்கள் அக்குழந்தையை மீட்டு தஞ்சாவூா் ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இக்குழந்தையை சாக்கு பையில் வைத்துவிட்டுச் சென்றது யாா் என்பது குறித்து பூதலூா் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.