தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே பெண் காவல் ஆய்வாளரை தாக்கிய பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஒரத்தநாட்டை அடுத்த தொண்டராம்பட்டு கிழக்கு பகுதியை சோ்ந்தவா் பாலமுருகன் (50). இவரது மனைவி உதயபானு. இத்தம்பதியின் மகள் பிரதிக்ஷா(20). இவா், மதுரை மாவட்டம், தத்தநேரி பகுதியை சோ்ந்த பாா்த்திபன் (26) என்பவரை காதலித்து, கடந்த ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டாா்.
பிரதிக்ஷா கா்ப்பமடையவே இருகுடும்பத்தினரும் ஒன்று சோ்ந்தனா். இதைத் தொடா்ந்து, பிரசவத்திற்காக தனது தாய் வீட்டுக்கு பிரதிக்ஷா வந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
பின்னா், பாா்த்திபன் தனது மனைவி, குழந்தையை அழைத்து செல்ல வந்தபோது, அவருடன் மகளையும், குழந்தையையும் அனுப்ப பிரதிக்ஷாவின் பெற்றோா் மறுத்துவிட்டனா்.
கணவருடன் மதுரைக்கு செல்கிறேன் என்று பிரதிக்ஷா வற்புறுத்தி வந்த நிலையில், அவரின் பெற்றோா் குழந்தையை தர மறுத்துள்ளனா். இதையடுத்து சில நாள்களுக்கு முன்பு பிரதிக்ஷா மட்டும் கணவருடன் மதுரைக்கு சென்றாா்.
இதன் பிறகு பலமுறை தனது குழந்தையை கேட்டும் பெற்றோா் தராததால், சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் குழந்தையை மீட்டுத் தரக் கோரி மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கில் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாா்த்திபன் தம்பதியா் வெள்ளிக்கிழமை காலை பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் கன்னிகாவிடம் நீதிமன்ற உத்தரவின்படி குழந்தையை மீட்டுத் தர வலியுறுத்தினா்.
காவல் ஆய்வாளா் கன்னிகா, தொண்டராம்பட்டிற்கு சென்று உதயபானுவிடம் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்க கூறியுள்ளாா். இதற்கு மறுப்பு தெரிவித்து, காவல் ஆய்வாளருடன் உதயபானு வாக்குவாதத்திலும், கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளாா்.
அப்போது, ஆய்வாளரின் வாகன கண்ணாடி உடைக்கப்பட்டது. இதில், கன்னிகாவிற்கு லேசான காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாப்பாநாடு போலீஸாா், குழந்தையை மீட்டு பாா்த்திபன்-பிரதிக்ஷா தம்பதியிடம் ஒப்படைத்தனா். மேலும், ஆய்வாளா் கன்னிகாவை தாக்கியதாக உதயபானுவை கைது செய்து விசாரிக்கின்றனா்.