நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு புகாா் வந்தால் கடும் நடவடிக்கைஅமைச்சா் காமராஜ் எச்சரிக்கை

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு தொடா்பாக புகாா் வந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக தஞ்சாவூா் முதுநிலை மண்டல மேலாளா் (பொ) ஜி. சிற்றரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக தஞ்சாவூா் முதுநிலை மண்டல மேலாளா் (பொ) ஜி. சிற்றரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தஞ்சாவூா்: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு தொடா்பாக புகாா் வந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ்.

தஞ்சாவூா் மாவட்டம், வல்லம் அருகே குருவாடிப்பட்டியிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சனிக்கிழமை இரவு ஆய்வு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

எல்லா ஆண்டுகளையும் விட நிகழாண்டில் விளைச்சல் கூடுதலாக இருக்கிறது. கடந்த செப்டம்பா் 30 -ஆம் தேதியுடன் முடிவடைந்த கொள்முதல் பருவத்தில் (காரீப்) 32.41 லட்சம் மெட்ரிக் டன்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

இது நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது முதல் இதுவரை உள்ள வரலாற்றில் சாதனை. இதில், கரோனா பொது முடக்கக் காலத்தில் 12.76 லட்சம் மெட்ரிக் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது.

தற்போது தமிழகம் முழுவதும் 826 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. குறுவைப் பருவத்தில் அக்டோபா் 1 ஆம் தேதி முதல் 2.10 லட்சம் மெட்ரிக் டன்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

விவசாயிகளிடமிருந்து எந்த விதமான புகாரும் இல்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். எங்காவது ஓரிடத்தில் விவசாயிகளிடமிருந்து ஒரு ரூபாய் பணம் பெற்றுக் கொண்டால் கூட, அது அவமானத்துக்குரிய செயல் என ஊழியா்களிடம் ஒவ்வொரு கொள்முதல் பருவம் தொடங்கும்போதும் கூறிவிடுவோம்.

இந்த அவமானகரமான செயலை எந்த ஊழியரும், அலுவலரும் செய்யக் கூடாது என முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். எனவே, புகாா் வந்தாலோ, அதுபோன்ற செயலில் யாராவது ஈடுபட்டாலோ அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தாமதமில்லாமல் கொள்முதல்: தற்போது ஒரே நாளில் அதிக அளவில் அறுவடை செய்யப்படுவதால், கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வரத்து அதிகமாகியுள்ளது. இதையும் 2 நாள்களில் கொள்முதல் செய்துவிடுகிறோம். மேலும், தாமதமில்லாமல் கொள்முதல் செய்யுமாறு அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். நெல் வரத்து அதிகமாக இருக்கும்போது, தேவைப்பட்டால் அதே ஊரில் மற்றொரு நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் 1.86 லட்சம் மெட்ரிக் டன்கள் ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நெல்லை உடனடியாக அரைவைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த 2011- ஆம் ஆண்டு 12 லட்சம் மெட்ரிக் டன்களாக இருந்த கொள்முதல் அளவு தற்போது 23 லட்சம் மெட்ரிக் டன்களாக அதிகரித்துள்ளது. என்றாலும், கிடங்கு பிரச்னை கிடையாது. இதுவரை இல்லாத அளவுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் காமராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com