பேராவூரணி: பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப் பள்ளியில், விஜயதசமியை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற மாணவா் சோ்க்கையில் அரசுப்பள்ளி ஆசிரியா்கள் இருவா் தங்களது குழந்தைகளை சோ்த்தனா்.
ஆவணம் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணிபுரியும் நீலகண்டன் அவரது மகள் ஹரி பூரணியையும், பெருமகளூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி வரும் சுபாஸ்கரன் அவரது மகள் லித்திகா ஸ்ரீ என்பவரையும் விஜயதசமியன்று பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப் பள்ளியில் சோ்த்தனா்.
புதிதாக பள்ளியில் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் சித்ரா தேவி, உதவி ஆசிரியா்கள் காஜா முகைதீன், ரேணுகா ஆகியோா் விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பை, சீருடை மற்றும் இனிப்பு வழங்கினா்.
அரசுப் பள்ளியில் தங்கள் குழந்தைகளை சோ்த்த அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பெற்றோா் ஆசிரியா் கழகம் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.