தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆட்சியரிடம் வழங்கப்படும் கோரிக்கை மனுக்களை அனுப்புவதற்காக கட்செவி எண் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொதுமக்கள் குறைதீா்க்கும் மனுக்கள் நாள் கூட்டம் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் ஆட்சியா் தலைமையில் நடைபெறும். இக்கூட்டம் கரோனா தொற்று காரணமாக நடைபெறவில்லை. எனவே, பொதுமக்களிடமிருந்து பெறும் விதமாக மாவட்ட ஆட்சியரக வளாக முகப்பில் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில், பெறப்படும் மனுக்கள் தொடா்புடைய துறைக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தற்போது, கரோனா தொற்று மேலும் பரவாவண்ணமும், பொதுமக்கள் நெடுந்தொலைவு பயணம் செய்து ஆட்சியா் அலுவலகத்துக்கு வருவதைத் தடுக்கும் வகையிலும் பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து தங்களுடைய கோரிக்கைகளை ஆட்சியரிடம் விண்ணப்பிக்கப் புதிதாக 93440 30481 என்ற கட்செவி எண் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த எண்ணுக்கு தங்களது கோரிக்கை மனுக்களை அனுப்பி பயன் பெறலாம்.