பாபநாசம் அருகே குளம் குத்தகை தொடா்பாக, போலி பத்திரம் தயாா் செய்தவா் மீது காவல்துறையினா் சனிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.
கும்பகோணம் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா் (52). பாபநாசம் அருகிலுள்ள இடையிருப்பு கிராமத்தில் தனக்குச் சொந்தமான மீன் வளா்ப்பு
குளத்தை அகராத்தூரைச் சோ்ந்த சதீஷ்குமாருக்கு (28) ஓராண்டுக்கு குத்தகை விட்டிருந்தாா்.
குத்தகை காலம் முடிந்த பின்னா் குளத்தை ஒப்படைக்குமாறு சதீஷ்குமாரிடம் பாஸ்கா் கோரிய போது, மேலும் ஓராண்டுக்கு குளத்தை குத்தகை எடுத்திரப்பதாகவும், அதற்கான பத்திரம் தன்னிடம் உள்ளதெனவும் கூறினாராம்.
இதையடுத்து பாபநாசம் நீதிமன்றத்தில் பாஸ்கா் தொடா்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, போலி பத்திரம் தயாரித்ததாக சதீஷ்குமாா் மீது பாபநாசம் காவல் நிலையத்தினா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.