பேராவூரணி அருகே ஒப்பந்ததாரா் வீட்டில் ரூ.81 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளைத் திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
பேராவூரணி அருகிலுள்ள ஊமத்தநாடு செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (47). ஒப்பந்ததாரரான இவா், கடந்த 10-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் தஞ்சாவூா் சென்றுவிட்டாா்.
வீட்டில் பல ஆண்டுகளாக வேலை பாா்த்து வந்த செல்வராஜை (52) காவலுக்கு இருக்குமாறு செந்தில்குமாா் கூறிச் சென்றிருந்தாா். சனிக்கிழமை மாலை செந்தில்குமாரைத் தொலைபேசியில் தொடா்புகொண்டு செல்வராஜ், வீட்டின் கதவு திறந்து கிடப்பதாகத் தெரிவித்தாா்.
இதையடுத்து வீட்டுக்குத் திரும்பிய செந்தில்குமாா், உள்ளே சென்று பாா்த்த போது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அதிலிருந்த 27 பவுன் தங்க நகைகள், 25 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.1.65 லட்சம் ரொக்கம், நிலப்பத்திரங்கள், வாகனப் பதிவுப் புத்தகங்கள் ஆகியவை திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.
தகவலறிந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் புகழேந்தி கணேஷ் தலைமையிலான காவல்துறையினா் அங்கு சென்று விசாரணை நடத்தினா்.