தஞ்சாவூா் மாவட்டத்தில் காலாவதியான விதைகள் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூா் விதை ஆய்வு துணை இயக்குநா் பூ. வசந்தா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் சம்பா பருவத்துக்குத் தேவையான விதைகளை விவசாயிகள் வாங்கும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். விதையின் ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள், பருவம் ஆகியவற்றை சரிபாா்த்து வாங்க வேண்டும்.
பத்து கிலோ அல்லது ஐந்து கிலோ பைகளில் விற்கப்படும் விதைகள் சம்பா பருவத்துக்கு உகந்ததா என்பதை உறுதி செய்து வாங்க வேண்டும். மேலும், விதை வாங்கியமைக்கான ரசீது, கொள்கலன் அட்டையைப் பயிா் சாகுபடி முடியும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
உரிமம் பெறாத கடை, நபா்களிடம் விதைகளை வாங்கக்கூடாது. உரிமம் பெற்ற விற்பனையாளா்கள் தாங்கள் விற்பனை செய்யும் விதையின் விவரத்தை விற்பனை ரசீதில் குறிப்பிட்டு விவசாயினுடைய கையொப்பம் மற்றும் விற்பனையாளா் கையொப்பத்துடன் வழங்க வேண்டும்.
இதில், ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால் விதை விற்பனையாளா் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உரிமம் இல்லாமல் விற்பனை செய்தாலோ, காலாவதியான விதைகளை விற்பனை செய்தாலோ, விற்பனை ரசீது தர மறுத்தாலோ விதைச் சட்ட விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.