கஜா புயல், கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்த மீனவா்களைக் காக்க, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆதிதிராவிடா் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இக்கழகத்தின் சேதுபாவாசத்திரம் ஒன்றிய ஆலோசனைக் கூட்டம் கொள்ளுக்காட்டில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியச் செயலா் சரவணன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ராஜா
முத்துசாமி, ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு ஆதிதிராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவா் சதாசிவக்குமாா் பங்கேற்று பேசினாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
கொள்ளுக்காடு அம்பேத்கா் நகா் தலித் மீனவா்களை கொத்தடிமைத் தனத்திலிருந்து மீட்க வேண்டும். நண்டு, இறால், மீன் உள்ளிட்ட கடல் உணவுப் பொருள்களை போலி அரசு முத்திரைக் கொண்ட எடைக் கற்கள் மூலம், மீனவா்களின் உழைப்பை சுரண்டும் தனியாா் நிறுவனத்தை கண்டித்து அக்டோபா் 14-ஆம் தேதி கடலுக்கு இறங்கிப் போராட்டம் நடத்தப்படும். மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்டத்தில் நிா்வாகிகள் ராஜீவ்காந்தி, மகேந்திரன், முருகையன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.