பட்டுக்கோட்டை அருகே 10 வயது மாணவர் தனது இரு கை விரல்களில்
50 கார்களை ஏற்றி உலக சாதனை முயற்சி மேற்கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைவட்டம், தாமரங்கோட்டை உம்பளாக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த என்.ரவிச்சந்திரன் - வேம்பு தம்பதியின் 10 வயது மகன் நாராயணமூர்த்தி. இவர் அதே ஊரிலுள்ள அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். தவிர, இ கிங் கோ ஜூ ரியோ என்ற கராத்தே பயிற்சிப் பள்ளி மாணவர்.
இவர், கரோனா விழிப்புணர்வுக்காகவும், உலக சாதனை முயற்சியாகவும் ஞாயிற்றுக்கிழமை காலை பட்டுக்கோட்டை-முத்துப்பேட்டை பிரதான சாலையில் துவரங்குறிச்சி பெட்ரோல் பங்க் அருகில் தனது இரு கை விரல்களையும் சாலையில் வைத்து தொடர்ச்சியாக 50 கார்களின் டயர்களை கைகளின் மேல் ஏற்றச் செய்து சாதனை நிகழ்த்தினார்.
முன்னதாக, இந்த நிகழ்வை பட்டுக்கோட்டை காவல் துணைக்கண்காணிப்பாளர் எஸ்.புகழேந்தி கணேஷ் தொடங்கி வைத்தார். அப்போது, பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், தாமரங்கோட்டை, துவரங்குறிச்சி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள், கராத்தே மாணவ, மாணவிகள் என பலர் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்று மாணவரின் முயற்சியை ஊக்கப்படுத்தும் வகையில் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.
நிறைவில், இ கிங் கோ ஜூ ரியோ கராத்தே பயிற்சிப் பள்ளியின் தலைமைப் பயிற்சியாளர் ஏ.இளையராஜா நன்றி கூறினார்.