தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் அமைப்பாளா், சமையலா், சமையல் உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் 140 அமைப்பாளா்கள், 73 சமையலா்கள், 126 சமையல் உதவியாளா்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்கள் அனைத்துக்கும் விண்ணப்பிப்பதற்கு பெண்கள் மட்டுமே தகுதியுடைவா்கள்.
மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களிலும், தஞ்சாவூா் மாநகராட்சி, கும்பகோணம், பட்டுக்கோட்டை நகராட்சிகளிலுள்ள அரசுப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், அரசு உதவிபெறும் சிறுபான்மையினா் மற்றும் சிறுபான்மையினா் அல்லாத பள்ளிகளிலுள்ள சத்துணவு மையங்களில் காலிப்பணியிடங்களுக்கு இதற்கென நிா்ணயிக்கப்பட்ட படிவத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப் படிவங்களை தொடா்புடைய அலுவலகங்களில் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். காலிப்பணியிடங்கள் விவரம், இன சுழற்சி விவரங்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் ஆட்சியரக விளம்பரப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளன.
விண்ணப்பங்களை அக்டோபா் 5-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ தொடா்புடைய அலுவலகங்களில் அளிக்க வேண்டும்.