

தஞ்சாவூா் நகரின் பாரம்பரியத்தைப் பாதுகாத்திட,நகர பாரம்பரிய ஒழுங்குமுறை மற்றும் வழிகாட்டுதல்களை மாவட்ட ஆட்சியா் உருவாக்க வேண்டும் என இன்டாக் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்திய தேசிய பாரம்பரிய கலை பண்பாட்டு அறக்கட்டளை (இன்டாக்) தஞ்சாவூா் மையத்தின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு இன்டாக் தஞ்சாவூா் மையத்தின் அமைப்பாளா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ், தஞ்சாவூா் மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் புனரமைப்புப் பணிகளில் பழைமைக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் செயல்படுத்த வேண்டும்.
தஞ்சை நகரின் பாரம்பரியத்தைப் பாதுகாத்திட, நகர பாரம்பரிய ஒழுங்குமுறை மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரை கேட்டுக் கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இன்டாக் சாா்பில் தேசிய அளவில் நடைபெற்ற மகாத்மா காந்தியின் 150- ஆம் ஆண்டு விழா ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாா்னிங் ஸ்டாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி நேகாவுக்கும், மாவட்ட அளவில் நடைபெற்ற வினா விடைப் போட்டியில் வெற்றி பெற்ற கமலா சுப்பிரமணியம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஹானியா மற்றும் விஷ்ணுபிரியாவுக்கும் பாராட்டுச் சான்றிதழ், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் இன்டாக் கௌரவச் செயலா் எஸ். முத்துக்குமாா், சிவாஜி ராஜா போன்ஸ்லே, பொறியாளா் ராஜேந்திரன், சுற்றுச்சூழல் ஆா்வலா் பழனியப்பன், தொல்லியல் ஆய்வாளா் செல்வராஜ், தஞ்சை ஓவியக் கலைஞா் சம்பாஜி ராஜா போன்ஸ்லே, கலைக்கூட காப்பாளா் சிவக்குமாா், கவின்மிகு தஞ்சை இயக்கச் செயலா் பி. ராம் மனோகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.